காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலினும் தனது முகநூலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோனியா காந்திக்கு திமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர, விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்கு நிரந்தர உத்தரவாதமாகத் திகழும் காங்கிரஸ் கட்சியின் சிறப்பான பணியினை, எந்த சக்தியாலும் நீக்கி விட முடியாது எனப் பதிவிட்டுள்ளார்.