கன்னியாகுமரி கடலில் திங்கள்கிழமை கடல் நீர்மட்டம் உள்வாங்கியதால் திருவள்ளுவர் சிலைக்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி கடல்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை தொடங்கி, காலை 9.30 மணி வரை கடல் நீர் உள்வாங்கி, தாழ்வாகக் காணப்பட்டது.
இதனால், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கமாக காலை 8 மணிக்குத் தொடங்கவேண்டிய படகுப் போக்குவரத்து 9.30 மணிக்கு மேல் தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெற்றது. ஆனால், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால், அங்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.