திருச்சி: மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு
திருச்சி மாநகரில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடம்பெற்றிருக்கும் பலகைகளில் ஹிந்தி எழுத்துகளை அழித்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. தமிழகத்தில் ஹிந்தித் திணிப்புக்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உயிர்ப்புடன் உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி மாநகரில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் பெயர்ப்பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துகள் தார் மற்றும் கருப்பு பெயிண்ட் மூலம் அழிக்கப்பட்டுள்ளன.
திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள பெயர்ப் பலகை, பாரதி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் வாடிக்கையாளர் சேவை மைய பெயர்ப்பலகை, பறவைகள் சாலையில் உள்ள அஞ்சலக வங்கி, ஏடிஎம் பெயர்ப்பலகை, அஞ்சல் பெட்டி ஆகியவற்றில் இருந்த ஹிந்தி எழுத்துகளை வெள்ளிக்கிழமை இரவோடு, இரவாக சிலர் தார் பூசி அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன் கூறுகையில், ""விமான நிலையத்தின் நுழைவுப் பகுதியில் இருந்த பெயர்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டிருப்பதாக ஊழியர்கள் தெரிவித்த பிறகே, இந்த விவகாரம் எனது கவனத்துக்கு வந்தது.
இதுதொடர்பாக மாநகரக் காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்'' என்றார்.
திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் கூறுகையில், ""ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள், விமான நிலைய பெயர்ப்பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை அளித்துள்ளனர். இதுதொடர்பாக, அந்தந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கேட்டுள்ளோம். இந்த பதிவுகளை ஆய்வு செய்து இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் யார் என கண்டுபிடித்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.