கன்னியாகுமரியின் கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் திங்கள்கிழமை நேரில் வலியுறுத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குளச்சல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், உதகை சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கடலோரக் கிராமங்கள் இருக்கின்றன. இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பெரிய அளவில் கடல் சீற்றங்கள் ஏற்படுகின்றன.
இதனால், அங்குள்ள வீடுகள், சர்ச், கல்லறைத் தோட்டங்களை கடல் நீர் அரித்துச் சென்று விடுகிறது. தென்மேற்குப் பருவ மழைத் தொடங்கிவிட்டதால், கடந்த 2 நாள்களாக அங்கு பெருமளவில் கடல் சீற்றம் காணப்படுகிறது.
அதனால், அந்தக் கடலோரக் கிராமப் பகுதிகளில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர்கள், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். மேலும், கன்னியாகுமரியில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் காணாமல்போய், உயிரிழந்த நிலையில்தான் அவர்களது உடல்கள் கிடைத்தன.
அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.