சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட அழைத்து வருவதில் என்ன சிக்கல் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தனக்கு பரோல் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், நேரில் ஆஜராகி வாதிட நளினிக்கு உரிமை உள்ளது என்று கூறியிருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது குறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தரப்பு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பரோல் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கில் தானே ஆஜராகி வாதிட அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த மனுவில், எனது மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எனவே எனக்கு 6 மாதம் பரோல் வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நளினி, உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 6 மாதம் பரோல் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு மனு கொடுத்துள்ளேன். மார்ச் மாதம் எனக்கு பரோல் கேட்டு என் தாயார் பத்மா, மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், இதுகுறித்து வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
இந்த வழக்கில் நானே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட விரும்புவதால், உயர்நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்த சிறைத்துறை டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நளினியின் கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.