அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.
முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுக அமைச்சரவையில் கடந்த 2001-06 வரை அமைச்சராகப் பதவி வகித்தவர் இன்பத்தமிழன். 2006-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திமுகவில் இணைந்தார். அதன்பின், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
மீண்டும் அதிமுகவில்...: அதிமுக, திமுக, அமமுக என மூன்று கட்சி களுக்குச் சென்ற இன்பத்தமிழன் தற்போது அதிமுகவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அவர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். இந்தச் சந்திப்பின்போது, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சாத்தூர் எம்.எல்.ஏ., ராஜவர்மன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.