தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தலைவராகும் முழுத் தகுதி பாக்யராஜுக்கு உண்டு என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 99-ஆவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா, சங்கத்தின் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டதாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிற பதவிகளுக்கான தேர்தல் ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பாரதிராஜா பேசியதாவது:
காலச் சூழலால் முன்னாள் தலைவர் விக்ரமனால் பணியாற்ற முடியவில்லை. அதனால், சங்கத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன். திரையுலகில் எவ்வளவோ அமைப்புகள் இருக்கின்றன. வட இந்தியாவிலும் பல அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் வலிமை, ஒற்றுமையைப் போல் எங்குமே இல்லை.
கடந்த 6 ஆண்டுகளில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து இருக்கிறார்கள். விக்ரமன் கறை படியாத நிர்வாகத்தை நடத்தி வந்தார். அவர்கள் சாதித்ததைக் காட்டிலும் அதிகமாக சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நடிகர் சங்கத் தலைவராகும் முழுத் தகுதி பாக்யராஜுக்கு உண்டு. செயல்திறன், அறிவு, ஆற்றல் எல்லாமும் அவரிடத்தில் உண்டு. அதனால் அவர் தலைவராகலாம் என்றார் பாரதிராஜா.