நதிகளை தேசிய மயமாக்க வேண்டும்: கே.எஸ். அழகிரி
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தலையிட்டு, இந்திய நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கே.மணிவர்மா தலைமையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞரணி பொதுச் செயலர் எஸ்.பாபுநந்தகுமார், மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமார் ரெட்டி, துணைத் தலைவர் டி.தனகோட்டி மற்றும் வி.என்.டி. தட்சிணாமூர்த்தி, வி.கே.ராமு, கிருஷ்ணன்,
சுக்கூர், அய்யம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.பாபு உள்பட பலர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தனர்.
பின்னர், கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அதிமுக அரசு திட்டமிடவில்லை. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், "மக்களிடம் செல்வோம்' என்று கர்நாடக அரசு சொல்வது ஏற்கக் கூடியதல்ல. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தலையிட்டு நதிகளை தேசிய மயமாக்க வேண்டும்.
அதிமுக மத்திய அரசை அணுகி அமைச்சர் பதவிகளைப் பெற்று, தமிழகத்துக்கு நல்லது செய்திருக்கலாம் என்றார்.
பேட்டியின் போது, எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார், மாநிலச் செயலர் பி.எஸ்.விஜயகுமார், வடக்கு மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.