அசோக் படுகொலைக்கு எதிராக கண்டனக் குரலெழுப்ப முன்வரவேண்டும்: சிபிஐ (எம்)

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
அசோக் படுகொலைக்கு எதிராக கண்டனக் குரலெழுப்ப முன்வரவேண்டும்: சிபிஐ (எம்)


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (வியாழக்கிழமை) விடுத்த அறிக்கையில்,

"திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினருமான தோழர் அசோக் (வயது 24) அந்த கிராமத்தில் உள்ள சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கரையிருப்பு கிராமத்தில் உள்ள தலித் மக்கள் தங்களது வேலை மற்றும் அன்றாடப் பணிகளுக்காக வேறு சமூக மக்கள் வசிக்கும் பொதுப்பாதை வழியாகவே செல்ல முடியும். அவ்வழியே செல்லும் தலித் மக்களை சில சாதி ஆணவம் கொண்ட வெறியர்கள் சாதிய ரீதியாக இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. இதனை தட்டிக் கேட்க முன்வருபவர்களை இடைமறித்து இழிவுபடுத்துவது, அச்சுறுத்தி தாக்குவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில் தோழர் அசோக் அவ்வழியே தனது தாயாருடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சில சாதிவெறி சமூக விரோத சக்திகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டும், புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நேற்று (12.06.2019) இரவு சுமார் 9.00 மணியளவில் தோழர் அசோக் வேலைக்கு செல்லும் போது, சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணமாகும்.

தென்மாவட்டங்களில் இதுபோன்று தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் சாதிய வெறியர்களால் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. அரசும், காவல்துறையும் இதனை தடுத்து நிறுத்தவும், சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காததனுடைய விளைவே இதுபோன்ற படுகொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

எனவே, தோழர் அசோக்கை படுகொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, கொலைக்குற்றப் பிரிவுகளுடன் - எஸ்.சி., / எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளை இணைப்பது உள்ளிட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், படுகொலை செய்யப்பட்ட அசோக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டுமெனவும், முன்னரே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தோழர் அசோக் படுகொலையை கண்டித்தும், சாதி வெறியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திட  வலியுறுத்தியும் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக கண்டன இயக்கங்கள் நடத்திட வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

ஒடுக்குமுறைகளை எதிர்த்து சமத்துவத்திற்காக குரல்கொடுக்கும் ஜனநாயக சக்திகள், தனிநபர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பினரையும் இந்த படுகொலைக்கு எதிராக கண்டனக் குரலெழுப்ப முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com