அதிமுவுடன் தோழமையுடன்தான் இருக்கிறோம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
மத்திய அரசின் மலிவு விலை மருந்தகத் திட்டத்தின் கீழ் அரும்பாக்கத்தில் மக்கள் மருந்தகத்தை தமிழிசை புதன்கிழமை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஏழைகள் பயன்பெறுவதற்காக மக்கள் மருந்தகத்தில் 70 சதவீத அளவுக்கு மருந்துகளின் விலை குறைக்கப்பட்டு விற்கப்படும். தமிழகத்தில் பாஜக வலுப்பெறும் வகையில் இன்னும் பல திட்டங்கள் கொண்டு வரப்படும்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற உள்ள பாஜக மாநிலத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க செல்ல உள்ளேன். சவாலான சூழல் கொண்ட தமிழகத்தில் பாஜகவினர் எப்படிப் பணியாற்றினர் என்பதை பாஜகவின் மத்திய தலைமை உணர்ந்துள்ளது.
அதிமுகவில் இரட்டை தலைமை குறித்து எழுந்துள்ள பிரச்னை அவர்களின் உள்கட்சி பிரச்னை. அதிமுகவுடன் தோழமையுடன் உள்ளோம். கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைப்பதாகும். அதனால், கூட்டணிக் கட்சியில் நடக்கும் விவகாரம் குறித்து கருத்துக்கூற முடியாது என்றார்.