ராமேசுவரம் தீவுப் பகுதிகளில் சூழல் சுற்றுலா திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், புதன்கிழமை மாலையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் இருந்து மீனவ சங்கப் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் குருசடை உள்ளிட்ட தீவுகளில் சூழல் சுற்றுலா திட்டத்தை வனத்துறை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதனால் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி சின்னபாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து ராமநாதபுரத்தில் கோட்டாட்சியர் சுமன் தலைமையில் அதிகாரிகள் மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் தரப்பில் சூழல் சுற்றுலா திட்டத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. மீனவர்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படாது.
சுற்றுலாத் திட்டம் எதிர்காலத்தில் தனியார் மயமாக்கப்படாது. மீனவர் கிராம சுற்றுச்சூழல் குழுவினரே திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஆனால், அதிகாரிகளின் சமரசத்தை மீனவர்கள் ஏற்கவில்லை. அத்துடன் அவர்கள் வெளிநடப்புச் செய்தனர். முன்னதாக பேச்சுவார்த்தை நடைபெறும் கோட்டாட்சியர் அலுவலகப் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.