நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருது: முதல்வர் வழங்கினார்

நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருது: முதல்வர் வழங்கினார்

நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ், தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு பசுமை விருதுகளை வழங்கி கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி.


சென்னை: நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ், தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு பசுமை விருதுகளை வழங்கி கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி.

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், 2018-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கி கௌரவித்தார்கள்.

தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம், நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுத்தல், தொழிற்சாலை நிறுவுவதன் பொருட்டு விதிக்கப்படும் சுற்றுச்சூழல் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தியை தொடங்குவதற்கான இசைவாணை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

2014–15ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் துறையின் மானியக் கோரிக்கையில் திருவள்ளூரில் இயங்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகத்திற்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் சுமார் 473 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைப் பாராட்டும் வகையிலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆண்டுதோறும் மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மூன்று தொழில் நிறுவனங்கள் மற்றும் மூன்று கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து பசுமை விருதுகளை வழங்கி வருகின்றது.

அந்த வகையில், மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக 2018-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ. வீர ராகவ ராவ், முன்னாள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு முதல்வர் பழனிசாமி இன்று விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com