திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வைகை அதிவிரைவு ரயில் பெட்டியின் சங்கிலி கழன்று தண்டவாளப் பகுதி சேதமடைந்தது.
மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் புதன்கிழமை காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, சோழவந்தான், திண்டுக்கல் வழியாக மணப்பாறை ரயில் நிலையத்திற்கு 19 நிமிடங்கள் காலதாமதமாக வந்தடைந்தது.
அங்கிருந்து 8.54 மணிக்கு திருச்சிக்கு சுமார் 127 கி.மீ. வேகத்தில் புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில், கண்ணுடையான்பட்டி பகுதியில் ரயில்வே கேட்டை கடந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் இணைப்பு சங்கிலி கழன்று விழுந்து தண்டவாளப்பகுதியில் இருந்த மரக்கட்டை, அத்துடன் இணைக்கப்பட்டிருந்த தண்டவாளப் பகுதி ஆகியவை 100 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் சென்றது. இதில், சுமார் இரண்டரை அடி நீள தண்டவாளப் பகுதி சேதமடைந்தது.
இதனால் ஏற்பட்ட பலத்த சப்தத்தையடுத்து, கண்ணுடையான்பட்டி சிக்னலில் வைகை அதிவிரைவு ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுமார் 10 நிமிடங்களுக்குப்பிறகு அப்பகுதியிலிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது.