சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சரியான அளவில் மழை பெய்யாத காரணத்தால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தற்போது கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. வரும் பருவமழைக்காலமாவது தேவையான நீரை அளிக்கும் என்று அனைவரும் ஏக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளியன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளுக்கு என ரூ.499.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடியும், திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.