திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன்ஜாமீன்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்குளில் இருந்து திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்குளில் இருந்து திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை திருவல்லிக்கேணி, வடக்கு கடற்கரை சாலை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன்காந்தி கலந்து கொண்டு அரசையும், நீதித்துறையையும் விமர்சித்துப் பேசினார். மேலும், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலை நாடகம் எனவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்தும் பேசினார். இதனையடுத்து திருமுருகன் காந்தி மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், வடக்கு கடற்கரை மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கு என 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, இந்திய அரசியல் சாசனத்தையும், மத்திய அரசையும் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். 
எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். மனுதாரர் தரப்பில் முன்ஜாமீன் வழங்கக் கோரி வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இனி இதுபோல பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன், முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com