நடிகர் சங்கத் தேர்தலில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்று பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நாசர் - விஷால் அணிக்கு எதிராக பாக்யராஜ் தலைமையிலான அணி களம் இறங்குகிறது. சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். இரு அணியினரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
விஜயகாந்துடன் சந்திப்பு: இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தை பாக்யராஜ் அணியினர் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கேட்டனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றவர்கள் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினர். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் ஐசரி கணேஷ், பாக்யராஜ் இருவரும் கூட்டாக கூறியதாவது: வாக்குக்குப் பணம் கொடுப்போம் என்று எங்கள் அணியினர் சொல்லவே இல்லை. நலிவடைந்த நாடகக் கலைஞர்களை எந்த சினிமா நடிகர்கள் பார்க்கச் சென்றாலும் பண உதவி செய்வார்கள். விஷால், கார்த்தி கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. இதைத்தான் குறிப்பிட்டோம். விஜயகாந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் எங்கள் கையைப் பிடித்து வாழ்த்து சொன்னார். எங்கள் அணிக்கு பலர் உதவுகிறார்கள். ஆனால், ராதாரவி எங்கள் சார்பாக செயல்படுகிறார் என்று கூற முடியாது. தேர்தல் குறித்து அவர் கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து. எங்களைப் பொருத்தவரை இந்தத் தேர்தலில் அரசியல் தலையீடு எதுவுமே இல்லை என்றனர்.