உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்புக்கு உட்பட்ட மாவட்டங்களில் ஏதேனும் இரண்டு அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள மதுரைக் கிளை நீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது.
மதுரைக் கிளை நீதிமன்றத்தின் வரம்புக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள ஏதேனும் 2 அரசு மருத்துவமனைகளில், திடீர் ஆய்வு செய்து, அங்கு செயற்கை சுவாசம், ஜெனரேட்டர்கள் இருக்கிறதா என்றும், உள் கட்டமைப்புகள் வசதிகள் குறித்தும் 3 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 3 பேர் மே 7ம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்ததற்கு பலத்த மழையால் ஏற்பட்ட மின்தடை காரணமா என விசாரணை நடத்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதியில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததில் நகர் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது.
இதனால் மதுரை அண்ணா நிலையம் பகுதியில் உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை மின் விநியோகம் தடைபட்டது. மின்தடை காரணமாக ஜெனரேட்டரும், மருத்துவ உபகரணங்களும் செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் தலைக்காயப் பிரிவில் உள்ள 101ஆவது வார்டில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரில், மின்தடை ஏற்பட்டவுடன் சிறிது நேரத்தில் சிகிச்சையில் இருந்த பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா(55), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரவிசந்திரன்(55), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (60) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காரணமாகத் தான் அடுத்தடுத்து 3 பேரின் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுவதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தாலும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.