தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட, நாமக்கல் நாடக நடிகர் சங்கத்தினர் 51 பேரை மீண்டும் சேர்க்க வேண்டும் என அச்சங்கத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ராஜா தெரிவித்தார்.
நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: வரும் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நடிகர் சங்கத் தேர்தல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நாடக நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த 51 பேர் நீக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 439 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், அனைவரையும் சங்கத்தில் சேர்த்து வாக்குப் பதிவு செய்வதற்கான உத்தரவை வழங்க வேண்டும். என்னை நடிகர் இல்லை என கருணாஸ், விஷால் ஆகியோர் கூறுகின்றனர். நாடோடிகள், பஞ்சுமிட்டாய், விடியல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன், அதற்கான சாட்சியம் என்னிடம் உள்ளது. கடந்த தேர்தலில், சரத்குமார், ராதாரவிக்கு ஆதரவாக செயல்பட்டதாலேயே பழிவாங்கும் நோக்கில் எங்களை சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். எனவே, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும்போது நீக்கப்பட்ட அனைவரையும் உறுப்பினர்களாக்க வேண்டும் என்றார்.