திருச்சி கும்பக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், சுங்கத்துறை அலுவலக ஊழியர், மனைவி மற்றும் மகளுடன் உயிரிழந்தனர்.
திருச்சி கண்டோன்மென்ட் சுங்கத்துறை அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன் (45). அவர் அப்பகுதியிலுள்ள ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தார். பூலாங்குடியிலுள்ள உறவினர் இல்ல நிகழ்வுக்காக, மனைவி வினிதா (34), மகன் ராகுல் (13), மகள் ராஜஸ்ரீ ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை சென்றார். நிகழ்ச்சியை முடித்த பின்னர் மகன் ராகுலை பேருந்தில் ஏற்றி விட்டு, மனைவி மற்றும் மகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
படைக்கலத் தொழிற்சாலை பிரிவு சாலையில் ராமச்சந்திரன் வந்த போது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி, சாலையோர மின்கம்பத்தில் இடித்து நின்றது. இதில் ராமச்சந்திரன், அவரது மனைவி வினிதா, மகள் ராஜஸ்ரீ ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், காரில் வந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்த நவல்பட்டு போலீஸார் அப்பகுதிக்குச் சென்று மூவரின் சடலத்தை கைப்பற்றினர். மேலும், கார் ஓட்டுநரான புதுக்கோட்டை முகமது ஜின்னாவை (32) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.