நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சானாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை கிண்டியில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் இடம் ஒதுக்கீடு செய்தது. இந்த இடத்தை முன்னாள் மேயரும், திமுக எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன், தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி எம்எல்ஏ மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதேபோன்று புகார்தாரரான பார்த்திபனும் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சானாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும் அதில் நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.