சென்னை: தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், குளிக்கத் தண்ணீர் இல்லாததால் காலிக் குடங்களுடன் சிறார்கள் சாலைகளில் அலையும் காட்சியைக் காண முடிகிறது.
தர்ஷிணி (9), பிரியா (11) இருவரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் பள்ளிக்குச் செல்கிறார்களாம். காரணம், ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வருவதால், தண்ணீர் பிடிக்க வேண்டும் என்பதால் பள்ளிச் செல்வதை தவிர்த்துவிடுகிறார்களாம்.
வியாசார்பாடியில் கன்னிகாபுரத்தில் இருக்கும் தங்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மெட்ரோ தண்ணீரை பிடித்து வருகிறார்கள்.
மூன்று முறை குடங்களில் தண்ணீர் கொண்டு சென்று வீட்டில் சேர்க்கிறோம். கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் பகுதியில் இருக்கும் குழாய்களில் கருப்பு நிறத்தில்தான் தண்ணீர் வருகிறது. குழாயில் அடித்துச் சென்றுதான் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம் என்கிறார் தர்ஷிணி.
வெறும் ஒரு மணி நேரம்தான் தண்ணீர் வருகிறது. ஒரு குடும்பத்துக்கு இரண்டு அல்லது 3 குடம் தண்ணீர்தான் கிடைக்கிறது. இங்கு 500 குடும்பங்கள் இருக்கின்றன என்கிறார் 35 வயது பெண்மணி அமுதா.
இங்கிருக்கும் பெண்கள் எல்லாருமே, தங்களுடன், குழந்தைகளையும் தண்ணீர் பிடிக்க அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்படி இல்லை என்றாலும், தண்ணீர் இல்லாததால் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலைதான் நீடிக்கிறது.
சிலர் மூன்று சக்கர சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்து தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால் நடந்து வந்துதான் தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலை நீடிக்கிறது.
தினக் கூலி வேலை செய்யும் பெண்கள் கூட தினமும் பணிக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ.200 சம்பாதிப்போம். ஆனால் தண்ணீர் இல்லாததால் தினமும் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்கிறார் ரமணி. அவ்வளவு ஏன் தினமும் காலை உணவு தயாரித்து விற்பனை செய்து வந்தேன். தண்ணீர் இல்லாததால் அந்த கடையையும் மூடிவிட்டேன் என்கிறார் நிலத்தை உற்று நோக்கியவாறு.
இங்கு குழாயில் வரும் மாசடைந்த தண்ணீரைக் குடித்து சிலருக்கு மஞ்சள்காமாலை பாதித்திருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.