சட்டவிரோத பேனர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம், சட்ட விரோத பேனர்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டது உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தொடர்ந்து இதே போன்று கால அவகாசம் கோரினால், உள்துறைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்து, சட்ட விரோத பேனர் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை.
அரசின் இதுபோன்ற செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தலைமை வழக்குரைஞர் வரும் இன்று விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி சட்ட விரோதமாக பேனர்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
சட்டவிரோத பேனர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றும் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் பேனர்களை எங்கும் பார்க்க முடிகிறது என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர், தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் அவகாசம் கோரினார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.