நாகை மாவட்டத்தில் சீர்காழி முதல் ஆக்கூர் வரையிலான பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தும்போது, சந்தை மதிப்பில் இழப்பீடுத்தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மண்சட்டி ஏந்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை- விழுப்புரம் இடையே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதில், நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் முதல் ஆக்கூர் வரையுள்ள பகுதிகளில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசின் வழிகாட்டு மதிப்புக்குக் குறைவாக இழப்பீடு வழங்கப்போவதாக விவசாயிகளிடையே தகவல் பரவியது.
இதையடுத்து, சட்டநாதபுரம், செங்கமேடு, அல்லிவிளாகம், ஆக்கூர் மற்றும் தலைச்சங்காடு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சாலையோர கட்டட உரிமையாளர்கள், தங்களிடமிருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பின்படி இழப்பீடுத்தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த சில வாரங்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை மண்சட்டி ஏந்திப் போராட்டம் நடைபெற்றது. இதில், நாகை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கோவி. ராமசாமி, சீர்காழி வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பண்டரிநாதன், பாமக நிர்வாகி முத்துகுமார், முன்னாள் ஊராட்சித் தலைவர் கேசவன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீஸார் தடுத்தி நிறுத்தினர்.