திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில், தன் பெற்றோருடன் காரில் சென்றபோது நேரிட்ட விபத்தில் அவர்களை இழந்த மாணவி, தலையில் கட்டுடன் பிளஸ் 2 தேர்வை வெள்ளிக்கிழமை எழுதினார்.
பாளையங்கோட்டை மகாராஜ நகரைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மனைவி மைதீன் பாத்திமா. இவர்களுடைய மகள் ஜமீம் மீரா. பிளஸ் 2 படித்து வரும் ஜமீம் மீரா, நீட் தேர்வு தொடர்பாக உடுமலைப்பேட்டையில் உள்ள பயிற்சி மையத்துக்கு கடந்த புதன்கிழமை சென்றுவிட்டு பெற்றோருடன் காரில் திருநெல்வேலிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கங்கைகொண்டான் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரியில் மோதி கார் விபத்துக்குள்ளானதில், ஜமீம் மீராவின் பெற்றோர் உயிரிழந்தனர். ஜமீம் மீராவும், ஓட்டுநர் முஜிபூர் ரஹ்மானும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியதை அடுத்து, தலையில் கட்டுப்போட்ட நிலையில், தான் படித்த புஷ்பலதா பள்ளிக்கு வந்த ஜமீம் மீரா, அங்கு தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தேர்வெழுதினார்.
முன்னதாக, அரசு மருத்துவக் கல்லூரி பிணவறைக்கு ஜமீம் மீராவை அவருடைய உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு பெற்றோரின் உடல்களைப் பார்த்து கதறியழுத மீரா, உங்கள் கனவை நனவாக்குவேன் என கண்ணீர்மல்க கூறிவிட்டு அங்கிருந்து திரும்பினார். ஜமீம் மீரா, தேர்வெழுதிக் கொண்டிருந்த நிலையில், அவருடைய பெற்றோரின் உடல்கள் தியாகராஜநகரில் அடக்கம் செய்யப்பட்டன.