பாப்பாரப்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் நூலகத்துடன் கூடிய பாரத மாதா நினைவாலயம் கட்டும் பணியை, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களில் சுப்பிரமணிய சிவா மிகவும் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட அவர், சிறையில் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். மேலும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் வசிக்கத் தொடங்கினார்.
அங்கு, த சின்னமுத்து என்பவரிடமிருந்து பெற்ற 6.21 ஏக்கர் நிலத்தில், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பாரத மாதா நினைவாலயம் அமைக்க தீர்மானித்து, சுதந்திரப் போராட்ட வீரர், சித்தரஞ்சன்தாûஸ அழைத்து வந்து, 1923-இல் பாரத மாதா நினைவாலயத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து, உடல் நலம் குன்றிய சுப்பிரமணிய சிவா, 1925-ஆம் ஆண்டில் காலமானார். பாரத மாதா நினைவாலயத்துக்கு அடிக்கல் நாட்டிய நிலத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சுப்பிரமணிய சிவாவுக்கு நினைவிடமும், பாரத மாதாவுக்கு நினைவாலயமும் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி காங்கிரஸ் மூத்ததலைவர் குமரி அனந்தன் உள்பட பல்வேறு தரப்பினர் உண்ணாவிரதம், நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு 2011-இல் நினைவிடம் திறக்கப்பட்டது. எனினும், பாரத மாதா நினைவாலயம் அமைக்க வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்ற வலியுறுத்தி தியாகிகள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந் நிலையில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், சுப்பிரமணிய சிவா நினைவிடம் அருகே ரூ.1.5 கோடி மதிப்பில் பாரத மாதா நினைவாலயம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சுப்பிரமணிய சிவாவின் கனவை நனவாக்கும் வகையில் நூலகத்துடன் கூடிய பாரத மாதா நினைவாலயம், கட்டும் பணியை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தார்.
இதில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் டி.ஆர்.அன்பழகன், பொதுப் பணித் துறை பொறியாளர் தியாகராஜன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.