சென்னை: ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத ஆட்சி தான் மத்தியில் செயல்பட்டு வருகிறது என்றும், ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை எப்படி பாதுகாப்பார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி. திமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து நாளை காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடைபெறும்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியில் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் அறிவிக்கப்படும்.
தேமுதிக விவகாரம் குறித்து துரைமுருகன் விளக்கம் தந்துவிட்டதால், நான் அதுபற்றி பேச விரும்பவில்லை என்ற ஸ்டாலின், மீண்டும் தேமுதிகவினர் யாரும் வந்து துரைமுருகனிடம் பேசிவிடக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியினர், துரைமுருகன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கலாம்.
ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத ஆட்சி தான் மத்தியில் செயல்பட்டு வருகிறது. ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை எப்படி பாதுகாப்பார் என கேள்வி எழுப்பினார்.
21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்த வேண்டும். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என ஸ்டாலின் கூறினார்.
திமுக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், ஆர். எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.