தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சென்னை வந்தார்.
நாகர்கோவிலில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தில்லியிலிருந்து ராகுல் விமானம் மூலம் புறப்பட்டு காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார்.
அங்கிருந்து கார் மூலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்பின்,
பகல் 12.30 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வரும் ராகுல், அங்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். இந்த நிகழ்ச்சி சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடிக்க உள்ளது.
அதன் பின், சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2.30 மணிக்கு நாகர்கோவில் செல்கிறார். பின்னர், கார் மூலம் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறும் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி மைதானத்துக்குச் செல்கிறார்.
ஒரே மேடையில் தலைவர்கள்: அங்கு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைத்து ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
அதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் செல்லும் ராகுல் காந்தி மார்ச் 14-இல் கேரளத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.