சென்னை உயர்நீதிமன்றத்தின் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி, மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து இவர்கள் 6 பேரும் அதே ஆண்டு பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி ஒருமனதாக முடிவு செய்து, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்துள்ளது.