நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதால், அவர்கள் காரைக்கால் திரும்பி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வம் (34). இவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தவேல் (32), திருப்பட்டினம் பகுதி பட்டினச்சேரியைச் சேர்ந்த தேவா (21) ஆகிய 3 பேரும் கடந்த 11-ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) பகலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், படகில் இருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, வாக்கி- டாக்கி உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்துகொண்டு, மீனவர்களை எச்சரித்து அனுப்பியதாகத் தெரிகிறது.
இலங்கை கடற்படையினர் தாக்கியதில் காயமடைந்த மூவரும் மற்ற மீனவர்களின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை இரவு காரைக்காலுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை மீனவ பஞ்சாயத்தார்கள் அழைத்துச்சென்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காரைக்கால் மீன்வளத்துறை, இந்திய கடலோரக் காவல் படை, கடலோரக் காவல் நிலைய போலீஸார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.