மதுரை: திருவிழாவை முன்னிட்டு மதுரை தொகுதியில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை என திருவிழா சமயத்தில் மதுரையில் மக்களவைத் தேர்தலை நடத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோயில் திருவிழாவுக்காக மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்றக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. மேலும், மதுரையில் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், பல லட்சம் பேர் கூடும் கோயில் திருவிழாவை கவனத்தில் கொள்ளாமல் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவை நடத்த முடிவெடுத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், விழாக் காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்குச்சாவடிகள் இருக்கும். வாக்களிக்க மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் நீதிபதிகள் கருத்துக் கூறினர்.