கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவுக்கு ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2,451 பக்தர்கள் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் செல்கின்றனர்.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி சனிக்கிழமை நிறைவு பெறுகிறது. இவ் விழாவில் கலந்துகொள்ள ராமேசுவரத்தில் இருந்து 65 விசைப்படகுகளில் 2,204 பக்தர்களும், 15 நாட்டுப் படகுகளில் 247 பக்தர்களும் என மொத்தம் 80 படகுகளில் 2,451 பக்தர்கள் வெள்ளிக்கிழமை காலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவுக்கு காலை 6 மணி முதல் விசைப்படகுகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே படகுகளில் செல்ல அனுமதிக்கப்படுவர்.
மேலும், பக்தர்கள் ரூ. 5 ஆயிரம் வரை மட்டுமே ரொக்க பணம் கொண்டு செல்ல வேண்டும். விலை உயர்ந்த தங்கம் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருள்களையும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
மேலும் ராமேசுவரத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் அனைவரையும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படையினர் இந்திய எல்லை வரை பாதுகாப்புடன் அழைத்துச் செல்வர்.
மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் மீன்வளத்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.