தருமபுரியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்த சிவராஜூக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்த சிவராஜ், அந்த பகுதியில் உள்ள பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, பாலக்கோடு போலீஸார் கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த தருமபுரி விரைவு மகளிர் நீதிமன்றம் சிவராஜூக்கு 4 ஆயுள்தண்டனையும் (ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்) ரூ.2 லட்சத்து 44 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
சிவராஜ் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார். அத்துடன், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் தனியாக ஒரு மனுவையும் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞர் ஆர்.பிரதாப் குமார், சிவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கூடாது என வாதிட்டார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை மட்டும் தள்ளுபடி செய்து, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.