புதுச்சேரி மாநிலத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக போட்டியிடும் என்று அம் மாநில முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் கூட்டணி பிரசாரம், தேர்தல் களப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும், திமுக கூட்டணியில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும். புதுவை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதி என்றும் கூறினார்.