பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை, சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விடியோ தொடர்பாக, தமிழக அரசின் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த வழக்கினை மத்திய குற்றப் புலனாய்வு முகமையிடம் (சிபிஐ) ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தில்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டம் 1946-இன் படி, இதற்கான ஒப்புதலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்துள்ளார் என்று தனது உத்தரவில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விடியோ தொடர்பாக ஏற்கெனவே சிலர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விடியோ வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முடிவு செய்தது. இந்த முடிவின் அடிப்படையில் சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கான அரசு உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.