தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் மதுரை புறநகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுரையில் இருந்து கும்பகோணம் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் மதுரை மேலூர் சித்தம்பட்டி அருகே சோதனை நடைபெற்றது.
அதில் 6 பெட்டிகளில் நகை இருந்ததாக கூறி அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. போதிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதால் ஏராளமான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர், போலீஸ் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகை மதிப்பீட்டாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நகை மற்றும் பரிசு பொருட்களை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், கைபற்றப்பட்ட நகைகள் அனைத்தும் கவரிங் என சோதனை முடிந்த பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார். மேலும் கவரிங் நகைகளை மதுரையில் உள்ள கடைகளுக்கு எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.