தமிழகத்தில் ஓரிரு இடங்களில், ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தென் உள்கர்நாடகம், அதையொட்டிய பகுதிகளில், வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனினும், உள் தமிழகத்தின் சில இடங்களில், வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரி கடலோரத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி முதல் திங்கள்கிழமை இரவு 11.30 மணி வரை கடல் சீற்றமாக காணப்படும். கடல் அலைகள் 1.7 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை உயர எழும்ப வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.