விழுப்புரம் அருகே தேர்தலையொட்டி விநியோகம் செய்வதற்காக ஓடைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,400 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் மர்மக் கும்பல் எரிசாராயத்தை கடத்தி வந்து தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு விநியோகித்துக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகிலன் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்.
இதை அறிந்த அந்தக் கும்பல் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டது. பின்னர், போலீஸார் அந்த கிராமப் பகுதியில் சோதனையிட்டனர். அப்போது, அங்குள்ள கோயில் அருகே ஓடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 40 கேன்களில் இருந்த 1,400 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் எனக் கூறப்படுகிறது.
அந்த சாராயம் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.