மக்களவைத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து, கொள்கை அடிப்படையில் மதச்சார்பற்ற கூட்டணி அமைத்துள்ளன. இதற்கு எதிராக சந்தர்ப்பவாதிகள் ஒன்று சேர்ந்து, தேர்தலுக்காக தற்காலிக கூட்டணி அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்கப் போவதில்லை.
இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு, முன்னோடி மாநிலமாக தமிழகம் அணி திரண்டு நிற்கிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்னதாக, முதன்முதலாக முன்மொழிந்தார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்ட தமிழகத்தில் ஏதாவது ஒரு மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற கூட்டணி பேராதரவு வழங்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். ராகுல்காந்தியை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் சொந்தமானவராகக் கருத முடியாது. அவர், வடக்கே உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் அதேநேரத்தில், இந்தியாவின் தென்பகுதியான தமிழகத்திலும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே தமிழகக் காங்கிரஸ் கட்சியின் விருப்பம் என்றார் அவர்.