சந்தேகத்துக்கு இடமான வகையில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பணப் பரிவர்த்தனை செய்பவர் குறித்த தகவலை வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜி.பிரகாஷ் அறிவுறுத்தி உள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வங்கி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில், பங்கேற்ற, சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜி.பிரகாஷ் கூறியதாவது: ரொக்கமாகப் பணத்தை எடுத்துச் செல்வதற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் வேன்களில், தனி நபர்களின் பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது. சென்னை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் இருந்து ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் பெயர், விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலகம், வருமான வரித் துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோருக்கு தகவல் அளிக்க வேண்டும். முகவர்கள், நிறுவனங்கள் ஆகியவை வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச் செல்லும் போது அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
ஏடிஎம்- இயந்திரங்களில் பணம் வைக்க, வாகனங்களில் செல்லும்போதும், ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்குப் பணம் எடுத்து செல்லும்போதும், வாகனத்தில் இருப்பவர்கள் அடையாள அட்டை, ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். கடந்த 2 மாதத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில், ரூ.1 லட்சத்துக்கும் மேல் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்த தகவல்களை, மாவட்டத் தேர்தல் அலுவலகத்துக்கு வங்கி நிர்வாகம் அளிக்க வேண்டும் என்றார். இதில், கூடுதல் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் ஆர்.லலிதா, எம்.மதுசுதன் ரெட்டி, வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.