தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை காலை 11.15 மணியளவில் சென்றார். அவரை விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தேமுதிக துணைச் செயலர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
விஜயகாந்தைச் சந்தித்து பூங்கொத்தும், பொன்னாடையும் போர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். அதன்பின், தேர்தல் நிலவரம் தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க உள்ள நிலையில், அது தொடர்பாகவும் விஜயகாந்துடன் முதல்வர் ஆலோசித்துள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. முதல்வருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்பட பல்வேறு நிர்வாகிகள் உடன் சென்றனர்.