வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை என்றார் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அலங்காநல்லூர் பகுதியில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக, மஞ்சமலை அய்யனார் கோயிலில் தரிசனம் செய்து முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். மக்களவைத் தேர்தலாக இருந்தாலும், சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான தொலைநோக்குத் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, அதை நிறைவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளோம். அதன்படியே தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
அவரவர் தகுதியின் அடிப்படையில் மக்கள் ஏற்றுக் கொண்டால் வாரிசுகள் அரசியலுக்கு வருவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமுள்ளது. மக்களவைத் தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.