சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார்.
அசோக் நகரில் கட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட டிடிவி தினகரன், அதன் முக்கிய அம்சங்களை வாசித்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
ஜிஎஸ்டி கவுன்சிலில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிகக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
தமிழகத்துக்கு என தனி செயற்கைக் கோள் ஏவப்படும்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கைவிடப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை டிடிவி தினகரன் வாசித்தார்.
தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.
மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை.
7 பேர் விடுதலை மற்றும் இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு வலியுறுத்தப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து செய்யப்படும்.
மாணவிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் இலவச நாப்கின் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக காப்பீடுத் திட்டம் கொண்டு வரப்படும்.
முதியோர்களுக்கான மாத உதவித் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
கிராமப்புரத்தில் சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.
சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யவும் நடவடிக்கை.
கல்லூரி மாணவர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலம் காக்க தனி வாரியம்.
தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் கைவிடப்படும். போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கியம்சங்கள் இடம்பெற்றுள்ளன.