அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்திருந்தார். ஆனால், கட்சியின் வேட்பாளர் பட்டியலை அவர் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், சரத்குமார் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த சரத்குமார், "நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஜெ.தீபாவின் எம்ஜிர் அம்மா தீபா பேரவை மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து பின்னர் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.