முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் செய்தவன், ஓ.பன்னீர்செல்வம் தொகுதி என்பதற்காகவா பயப்படுவேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சென்னையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தியானம் செய்தோ, கிளி ஜோசியம் பார்த்தோ நான் அரசியல் செய்பவன் அல்ல. மக்களின் குறைகளை அறிந்து, அதைத் தீர்ப்பதற்காகப் பாடுபடும் அரசியல்வாதியாகச் செயல்படுபவன். 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரன். தேனியில் நான் போட்டியிட வேண்டும் என்று ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். கண்டிப்பாகப் போட்டியிடுவதோடு, மிகப் பெரிய வெற்றியைப் பெறுவேன்.
மதவாத சக்திகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். அதனால், மிகப்பெரிய வெற்றியைப் பெறுவேன் என்றார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதி தேனி. அதனால், உங்களுக்குச் சவாலாக இருக்குமா என்று கேட்டபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் செய்தவன். அதனால், துணை முதல்வர், இணை முதல்வர்களை எல்லாம் கண்டு பயப்படப் போவது இல்லை. அவர்களை அவர்களுடைய இடத்திலேயே தோற்கடிப்பேன் என்றார்.