தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-இல் மக்களவைக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-இல் தொடங்கியது.
இன்று நிறைவு: வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 26) நிறைவடைகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிட 562-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 485 ஆண்களும், 75 பெண்களும் அடங்குவர். 2 பேர் மூன்றாம் பாலித்தனவர் ஆவர்.
இடைத் தேர்தல் வேட்புமனுக்கள்: சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிட 221 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. 183 ஆண்களும், 38 பெண்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 27-இல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 23-இல் எண்ணப்பட உள்ளன.