ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி குடியிருப்பின் உரிமையாளர், அவரது மகன்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு கழிவுநீர்த் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதன் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்து தர துப்புரவுப் பணியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதன்படி கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக வடமாநிலத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கி அடைப்புகளை நீக்கி சுத்த செய்தபோது விஷவாயு தாக்கி குடியிருப்பின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அவரது மகன்கள் 2 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் பெயர் விவரம்: கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், கார்த்திக், பரமசிவன், லட்சுமிகாந்தன், சுரதாபாய்
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த 6 பேரில் குடியிருப்பின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அவரது மகன்கள் 2 என 3 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கழிவுநீர்த் தொட்டிக்குள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி துப்புரவு பணியில் ஈடுபட்டதே 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது.