தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில், தூத்துக்குடியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவரும், வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தமிழிசை தெரிவிக்கவில்லை என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை பகல் 1:30 வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் ஏற்றார்.