பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது என்றார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
பெங்களூருவிலிருந்து செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடியா அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியா என்று கேட்கின்றனர். மத்தியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவே அனைத்து மண்டலங்களிலும் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் விவசாயிகள் மோசமான நிலைமையில் உள்ளனர். ஆகவே, புதிதாகப் பொறுப்பேற்க இருக்கும் அரசு, விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசாக அமையும். பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், நமது நாட்டை புதுமையான முயற்சிகள் மூலம் மாற்றியமைப்பார் என மக்கள் நம்பினர். ஆனால், அதற்கு நேர்மாறாக அவரது தலைமையிலான ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது என்றார்.