சென்னை: தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தமாகா போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் நடராஜன் என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் முதலில் ஒதுக்கியது.
ஆனால் இந்த ஒரு தேர்தலில் மட்டுமே சைக்கிள் சின்னம் பயன்படுத்த வேண்டும் என்றும் , கண்டிப்பாக குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தமாகாவுக்கு நிபந்தனை விதித்தது.
இதை எதிர்த்து தமாகா கட்சித் தலைவரான ஜி.கே.வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை கடந்த 26 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் கொண்ட அமர்வு, தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
எனவே தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் அக்கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை ஒதுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.