கோவை நிதி நிறுவனத்தில் ரூ. 2.27 கோடி மதிப்புள்ள 803 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் நிதி நிறுவனத்தின் பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 597.5 பவுன், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் மீட்டுள்ளனர்.
பெண் ஊழியர் ரேணுகா தேவியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, இவரும் சுரேஷ் என்பவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கொள்ளைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததே ரேணுகா தேவிதானாம். தான் பணியாற்றும் நிதி நிறுவனத்தில் சிசிடிவி கேமராவோ, பாதுகாவலரோ இல்லை என்பதே கொள்ளையடிக்கத் தூண்டியதாகக் கூறியுள்ளார் அவர்.
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய ரேணுகா, தன்னுடன் பணியாற்றும் மற்றொரு பெண் ஊழியருக்கு காபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.
பிறகு செல்போன் மூலம் சுரேஷுக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். நிதி நிறுவனத்துக்குள் நுழைந்த சுரேஷிடம் நகை மற்றும் பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு, கொள்ளையன் தன்னை தாக்கியது போல நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனால் காவல்துறையின் விசாரணையில், நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உதவி இல்லாமல் இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்ததும், ரேணுகாவின் உடலில் எந்த காயமும் இல்லாமல் இருப்பதும் சந்தேகத்தை எழுப்பியது.
கொள்ளை நடந்த நிதி நிறுவன அலுவலகத்துக்கு பக்கத்தில் இருந்த அரிசிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் பதிவும் விசாரணைக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
கோவை, ராமநாதபுரம் சந்திப்பு அருகேயுள்ள நிதி நிறுவனத்துக்கு முகமூடி அணிந்த மர்ம நபர் சனிக்கிழமை பிற்பகலில் சென்று அங்குப் பணியில் இருந்த பெண் ஊழியர்கள் இருவரைத் தாக்கி லாக்கரில் இருந்த 803 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.34 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றார். கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.2 கோடியே 27 லட்சத்து 28 ஆயிரத்து 190 என கணக்கிடப்பட்டிருந்தது. இது குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு நிறுவனத்தில் பணியாற்றிய நபர்களோடு தொடர்பு இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும், நிதி நிறுவனத்தில் பணியாற்றிய ரேணுகாதேவியும் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷ், ரேணுகாதேவியைக் கைது செய்து அவர்களிடமிருந்து 597.5 பவுன் தங்கத்தை போலீஸார் மீட்டனர்.